E.V. Velu’s house DVAC Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் 40 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வெளியான நிலையில், ஒரு ரூபாய் கூட எடுத்து செல்லவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
எ.வ. வேலு வீட்டில் ரெய்டு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் சோதனையானது நடைபெற்றது. அந்த வகையில், ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக’சங்கரானந்த் இன்ஃப்ரா’ நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் 3.23 கோடி ரூபாய் நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
எ.வ.வேலு மீது புகார் என்ன.?
இதனையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 120B, 409, 420, 468, 471, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 7(c), 13(2) r/w 13(1)(a) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதா.?
எ.வ.வேலு மீது வழக்கு பதிவு செய்த நிலையில், சென்னை, திருவண்ணாமலை, கரூர் என எ.வ. வேலுவிற்கு சொந்தமான பல இடங்களில் நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பங்கேற்றிருந்தனர். அந்த வகையில், இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 40 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த சோதனைஊயில் எந்த பணமும் கைப்பற்றப்படவில்லையென தற்போது கூறப்படுகிறது.
சோதனையில் சிக்கியது என்ன.?
இது தொடர்பாக எ.வ.வேலு கூறுகையில், எனக்கு சொந்தமான இடங்களில் இருந்து 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய் என கூறினார். என் வீட்டில் ஒரு ரூபாய்கூட எடுத்துச் செல்லவில்லை. எடுத்துச் செல்லப்பட்டுள்ள கணினியில் செய்தி தொடர்பான ஆவணங்கள் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என எ.வ.வேலு தெரிவித்தார். இதனிடையே எ.வ.வேலு வீட்டிற்கு முன்கூட்டியே சோதனை நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே எ.வ.வேலு தரப்பினர் உஷாராகி முக்கிய ஆவணங்களை மறைத்து விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.