Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பின்தங்கியிருப்பது, தமிழ்நாடு அரசியலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னடைவை சந்திக்க பல்வேறு காரணங்களை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர்.
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தரும் முடிவுகள்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக, அரைநூற்றாண்டுக்குப் பிறகு திராவிட கட்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 100-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், அதை விட மிகப்பெரிய ஆச்சரியமாக கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து இருப்பது அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து நடைபெற்ற மூன்று தேர்தலிலும் அங்கு போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றி பெற்று இருந்தார். ஆனால், இந்த முறை ஸ்டாலின் தொடர்ந்து பின்னடவை சந்தித்து இருப்பதும், முதல்முறையாக முதலமைச்சராகி 5 ஆண்டுகள் பூர்த்தி செய்ய பிறகும், தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்பில் ஸ்டாலின் மிகப்பெரிய தோல்வி முகத்தில் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்டாலினுக்கு தோல்வி முகம் – அதிர்ச்சியில் திமுக
ஸ்டாலின் முதலமைச்சர் முகமாக மட்டுமின்றி கொளத்தூர் தொகுதி வேட்பாளராகவும் தோல்வி முகத்திலேயே உள்ளார். பல்வேறு அமைச்சர்கள் பின் தங்கி இருந்தாலும், முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக ஸ்டாலினே தோல்வி கண்டு இருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற வடமாவட்டங்கள் திமுகவின் கோட்டை என்ற நிலை முழுமையாக மாறியுள்ளது. இந்த பகுதிகளில் ஒட்டுமொத்தமாகவே தவெக மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. முதலமைச்சராக தேசிய அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த ஸ்டாலின், உள்ளூரில் கோட்டைவிட்ட சில விஷயங்களே இந்த தோல்விக்கு காரணம் என இணையதள வாசிகளால் கூறப்படுகிறது.
ஸ்டாலின் & திமுகவின் தோல்விக்கான காரணங்கள்:
- தனியார் ஊடக விளம்பர நிறுவனம்
- சீனியர் அமைச்சர்கள்
- மாவட்டச் செயலாளர்கள்
- கூட்டணிக் கட்சிகள்
- கட்சி நிர்வாகிகள்
- அரசு அதிகாரிகள்
- கண்மூடித்தனமாக ஆதரித்த மூத்த பத்திரிகையாளர்கள்
- இணைய உடன்பிறப்புகள்
ஆகியோரின் செயல்பாடுகள் காரணமாகவே கடுமையாக உழைத்தபிறகும் முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது ஆட்சியும் வீழ்த்தப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் மற்றும் திமுகவினர் பேசி வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகங்கள்:
நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள கருத்துகளின்படி, ”
- ஸ்டாலினின் குடும்ப உறுப்பினரால் நடத்தப்படும் தனியார் ஊடக விளம்பர நிறுவனமானது, மக்கள் நல திட்டங்களுக்கான முன்னெடுப்புகளை காட்டிலும், அதை விளம்பரப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதில் தீவிரம் காட்டியது திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
- அரசு செயல்படுத்திய திட்டங்களை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதை மூத்த அமைச்சர்கள் பலரும் தவறவிட்டதோடு, சில அமைச்சர்களின் இருப்புகூட மக்களுக்கு தெரியாமல் போனதும் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது
- மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களை போன்று செயல்பட்டது, கட்சி நிர்வாகிகளை கட்டுக்கோப்பாக வழிநடத்தாமல் பல சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்ததும் பெண் வாக்காளர்களிடையே திமுக மீது எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கியுள்ளது
- கூட்டணிக் கட்சிகள் தனிப்பட்ட லாபத்திற்காகவும், அதிகாரத்தின் பலனை பெறவும் மட்டுமே திமுக உடன் பயணித்துள்ளது. ஆட்சியில் நிகழ்ந்த பல குறைகளை முறையாக சுட்டிக்காட்ட தவறவிட்டதும் திமுக சுயபரிசோதனை செய்வதற்கான வாய்ப்பை வழங்காமலேயே தடுத்துள்ளது
- அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர் மக்களுக்காக இல்லாமல் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் உத்தரவுகளுக்கு இணங்கி செயல்பட்டனர்
- அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பல மூத்த பத்திரிகையாளர்களும், திமுக ஆட்சியில் மக்கள் எதிர்கொண்ட பிரதான பிரச்னைகள் குறித்து பேசாமல், தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பது திமுக மட்டுமே என்பதில் மட்டுமே அதிக கருத்துகளை பகிர்ந்து கண்மூடித்தனமாக ஆதரவளித்துள்ளனர்
- இணையதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த திமுகவின் உடன்பிறப்புகள், ஆட்சியில் நிகழும் பிரச்னைகளை சுட்டிக்காட்டுபவர்களை மிகவும் தீவிரமாகவும், அநாகரீகமாகவும் தனிப்பட்ட முறையில் விமரிசித்தது பொதுமக்களிடையே பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது” என நெட்டிசன்கள் பல காரணங்களை அடுக்கியுள்ளனர்.