திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியதா? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மொத்த அரசியல் களமும் மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பு பலமிகுந்த கூட்டணியாக திகழ்ந்து வந்த திமுக, தற்போது கூட்டணி கட்சிகளை இழந்துள்ளது.
வெளியேறப்போகும் மதிமுக:
இந்த சூழ்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலையில் உள்ளார். முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த பிறகு நேரடியாக வைகோவை நேரில் சந்தித்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
துரை வைகோ காட்டம்:
இந்த சூழலில், தனியார் வார இதழுக்கு பேட்டி அளித்த துரை வைகோ திமுக மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தவெக தலைவர் விஜய் குதிரை பேர அரசியலில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் கட்சிகள் இதற்கு முன்னர் அதைச் செய்ததே இல்லையா? மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரை 2009ம் ஆண்டு ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் நிற்க வைத்ததே திமுக. அது அவர்களுக்கு மறந்துவிட்டதா?
திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயன்றது மட்டும் சரியா? தவெக சோபா மாடல் ஆட்சி என்றால் திமுக – அதிமுக இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது கண்டெய்னர் மாடலா? திமுக-வுடன் கூட்டணி வைத்தால் அது கொள்கைக்கான கூட்டணி என்பார்கள். வெளியே சென்றால் பெட்டி வாங்கிவிட்டோம் என்பார்கள். அது திமுக-வின் பென் நிறுவனம் மூலம் செய்யப்படும் நரேட்டிவ்.
பாலாறும் தேனாறும் ஓடியதா?
திமுக அனைத்துக்கட்சிகளிலும் ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கிறது. எங்கள் கட்சியிலும் ஒருவர் இருந்தார். வெளியேற்றப்பட்டார். திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியதா?
இவ்வாறு அவர் திமுக-வை சரமாரியாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
பொதுக்குழுவில் அறிவிப்பு:
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மதிமுக திமுக-வை மிக கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். விரைவில் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 27ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரும் முடிவை மதிமுக அதிகாரப்பூர்வமாக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.