MK STALIN DMK : தமிழகத்தில் ஆட்சியை இழந்துள்ள நிலையில், திமுகவின் அடுத்த கட்ட பயணம் தொடர்பாவும், கட்சியை மறு சீரமைக்கவும் குழு அமைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் முடிவால் திமுக அதிர்ச்சி
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தது. இதற்கு ஏற்ப பல்வேறு கருத்து கணிப்புகளும் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிப்புகளை வெளியிட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிவானது தலைகீழ் மாற்றங்களை சந்தித்தது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், ஆட்சியை பிடித்து அசத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுக அதிர்ச்சி அடைந்தது. அதிலும் விஜய்யின் சூறாவளியில் சிக்கி திமுக தலைவர் ஸ்டாலினும் தோல்வி அடைந்தது பெரும் திருப்பமாக அமைந்தது.
தோல்விக்கு காரணம் என்ன.?
இந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் என்ன.? என ஆய்வு செய்யும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் குழுவை அமைத்திருந்தார். அந்த குழுவானது தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு திமுக தலைமையிடம் அறிக்கையை சமர்பித்தது. அதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது இந்த நிலையில் திமுக தலைவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு தொகுதியாகச் சென்று கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாகச் சந்தித்து, அவர்தம் கருத்துகளைப் பெற்று வருமாறு 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுவுக்கும் தலா இருவர் என 38 பேரை அனுப்பி வைத்திருந்தேன்.
அறிக்கையை சமர்பித்த திமுக குழு
எனது எதிர்பார்ப்பு எள் முனையளவும் சிதையாமல் 38 பேரும் இரவு பகல் பாராது கழகத்தினரைச் சந்தித்து- ஆய்ந்து, அறிக்கைகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்கள். அவர்களின் கருத்துகளையெல்லாம் கேட்டறிந்து, அவர்கள் வழங்கிய அறிக்கையை ஒவ்வொரு நாளும் நானே படித்து, குறிப்பெடுத்து வருகிறேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமை மீதும் நிர்வாகிகளும் தொண்டர்களும் வைத்துள்ள ஆழமான பற்றுக்கும் உண்மையான நம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
திமுகவை சீரமைக்க குழு
அடுத்தாக வெளியிட்டுள்ள பதிவில், உடன்பிறப்புகளே… உங்களின் குரல்களைக் கேட்டேன்; ஆய்வறிக்கைகளைப் படித்தேன். கழகத்தின் அடுத்த நூறாண்டுக்கான பயணத்தைத் திட்டமிட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அந்த குழுவில், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழரசி இரவிக்குமார், எம்.எம்.அப்துல்லா, இ.பரந்தாமன், ச.முரசொலி எம்.பி, டாக்டர். எழிலன், எஸ்.கே.பி.கருணா இடம்பெற்றுள்ளது.
ஆகஸ்ட்டில் அறிக்கை சமர்பிப்பு
இக்குழுவானது, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு. தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், தேர்தல் பணிகளைச் செய்வதற்கான நிரந்தர அமைப்பு, தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் Think tank போன்றதொரு அமைப்புக்கான தேவை. அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவை குறித்தும் பரிந்துரைகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.