AIADMK Legislative Party Leader: அதிமுக உடைந்ததாக தகவல் வெளியாகி இபிஎஸ் அதை மறுத்த நிலையில், 30 எம்எல்ஏ-க்களுடன் பேரவைக்கு சென்று எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக்க, சிவி சண்முகம் கடிதம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்திற்கு வந்து, சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் பேரவையில் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்குமாறு கோரப்பட்டது. இதையடுத்து, 30 எம்எல்ஏ-க்களின் நிலை என்ன.? கட்சி உடைந்துவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, அது வெறும் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது, சிவி சண்முகம் தலைமையில், எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன், தலைமைச் செயலகம் சென்று, தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.