1977ம் ஆண்டிற்கு பிறகு திமுக அல்லது அதிமுக தான் ஆட்சியில் அமர்ந்து வந்தது. ஆனால் முதல்முறையாக இருகட்சிகளும் இல்லாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது. அதிமுக 3ம் இடம் சென்றது இபிஎஸ்க்கு நெருக்கடியாக அமைந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் அதிமுக அமர, திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி பேசியதாக சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
பரிதாப நிலைமையில் அதிமுக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம் திமுக இரண்டாம் இடத்தையும், அதிமுக மூன்றாம் இடத்துக்கும் சென்றது. இதில் அதிமுக நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. 2011, 2016ல் ஜெயலலிதா இருந்தபோது அடுத்தடுத்து அக்கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நான்கரை ஆண்டுகள் அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைமையில் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தல், இரு உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் என பலவற்றிலும் தோல்வியை சந்தித்தது.
2022ம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்தார். கட்சியில் பல மாற்றங்கள் செய்தார். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
2026 சட்டமன்ற தேர்தல் தோல்வி
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சிப்பாரதம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அதிமுக 47, பாமக 4, அமமுக 1, பாஜக 1 என 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 1977ம் ஆண்டிற்கு பிறகு திமுக அல்லது அதிமுக தான் ஆட்சியில் அமர்ந்து வந்தது. ஆனால் முதல்முறையாக இருகட்சிகளும் இல்லாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது.
இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தவெக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் விஜய் முதலமைச்சராவாரா என்ற கேள்வி எழுந்தது.
அதிமுக – திமுக கூட்டணி
அதேசமயம் யாரும் எதிர்பாராதவிதமாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியில் அமரப்போவதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பரம எதிரிகளாக இருந்த இரு கட்சிகளும் எப்படி கூட்டணி சேர்வார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இதனை திமுக, அதிமுக தரப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஆளுநர் அர்லேகர் ஒரு பேட்டியில் திமுக – அதிமுக பெரும்பான்மையோடு வந்தால் கூட ஆட்சி அமைக்க அழைப்பேன். எனக்கு பெரும்பான்மை பலம் தான் முக்கியம் என தெரிவிக்க, அப்படி என்றால் திமுக – அதிமுக கூட்டணி உண்மை தானா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அதனை கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் மறுத்தனர். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என தம்பிதுரை எம்.பி., தெரிவித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எனினும் அதற்குள் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்க விஜய் முதலமைச்சரானார்.
டீல் பேசிய இபிஎஸ் – போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்
ஆனால் நேற்றைய தினம் ஒரு சமூக வலைத்தளப்பதிவு வெளியானது. அதில், அதிமுக – திமுக கூட்டணி இல்லாமல் போன சூழலில், இரு கட்சிகளின் ஆதரவுடன் திருமாவளவனை முதல்வராக்கவும் திட்டம் சென்றிருக்கிறது. அதனால் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதில் திருமாவளவன் தாமதம் செய்தார் என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி டீல் பேசியதாக அதிமுக எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம் போட்டுடைடுத்துள்ளார். இதனை அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.,க்களும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.