ADMK MLA JOIN TVK : சட்டமன்ற தேர்தல் முடிவால் அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றன் பின் ஒன்றாக எம்எல்ஏ பதவி விலகி வரும் நிலையில், அடுத்தாக இன்னும் 9 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடைந்தது திமுகவின் கொள்கை கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்தது முதல் தற்போது வரை தினந்தோறும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது தமிழக அரசியல் களம். கடந்த 8 முதல் 9 வருடங்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி என கூறி வந்த நிலையில், ஒரே ஒரு தோல்வியால் அந்த கூட்டணி சுக்கு நூறாக உடைந்துவிட்டது. திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவிற்கு பல்டி அடித்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் என அடுத்தடுத்து கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், தற்போது மதிமுகவும் தவெகவிற்கு தாவியுள்ளது.
அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல்
இதனால் திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக,மநீம, மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மட்டும் நீடித்து வருகிறது. அதே நேரம் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திகழ்ந்த அதிமுகவும் தேர்தல் முடிவால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவு தான் காரணம் என அக்கட்சி நிர்வாகிகளே கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் தவெக அரசின் அமைச்சரவையில் பங்கு பெறும் வகையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளை பறித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.
பதவி விலகும் அதிமுக எம்எல்ஏக்கள்
அதே நேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றன் பின் ஒன்றாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல்,அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்தாக விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்த நிலையில் நேற்று கரூர் எம்எல்ஏ எம் ஆர் விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்து அதிமுக தலைமையை அதிர செய்தார்.
அடுத்து பதவி விலக காத்திருக்கும் எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் அதிமுகவின் எம்எல்ஏக்களின் ராஜினாமா கரூர் விஜயபாஸ்கரோடு நிறைவடையாது எனவும் இன்னும் பெரிய லிஸ்ட் காத்திருப்பதாக தவெக மற்றும் அதிமுக அதிருப்தி அணி வட்டார தகவல்களாக உள்ளது. அந்த வகையில், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் பதவி விலகும் பட்சத்தில், அவருடன் சங்கராபுரம், பரமத்தி வேலூர், புவனகிரி மற்றும் பண்ருட்டி ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பதவி விலகத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் பாலக்கோடு கேபி அன்பழகன், திருத்தணி ஹரி, கே சி வீரமணி ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதனால் அதிமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சியில் உள்ள நிலையில், ஒட்டு மொத்த அதிமுகவும் தவெக பக்கம் வருவதால் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது.