Senthil Balaji: தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் தலைமறைவாகியுள்ள திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியை தேடும் பணிகளை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளதாம்.
Senthil Balaji: தவெக ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக நட்சத்திர விடுதிகளில் ரசிகய சந்திப்புகள் அரங்கேறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தவெக ஆட்சியை கலைக்க முயற்சி:
சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்தது. இதையடுத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுவதாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் தங்கள் தரப்பு ஈடுபடவில்லை என்றும், திமுகவினர் தான் தங்கள் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாகவும் தவெக தரப்பு குற்றம்சாட்டி வந்தது. அதன் உச்சபட்சமாக, சபநாயாகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க தவெக எம்.எல்.ஏக்களிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
9 பேர் கைது – செந்தில் பாலாஜிக்கு தொடர்பு?
தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில், கடந்த புதன்கிழமை திருநாவுக்கரசர் என்பவர் உட்பட 3 பேரும், நேற்று மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அசோக் குமார் மூளையாக செயல்பட்டதாகவும், அவருக்கு பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போது எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
நட்சத்திர ஓட்டல்களில் ரகசிய சந்திப்பு..
இந்நிலையில் தவெக ஆட்சியை கவிழ்க்க சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சதி ஆலோசனை நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, “கரூரைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருச்சியை சேர்ந்த நரேஷை சந்தித்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு உதவும் எம்.எல்.ஏக்களுக்கு அந்த ஓட்டலில் வைத்து ரூ.35 கோடியை கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் ஆதிக்கம் செலுத்திய கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள் தான் ரமேஷ் மற்றும் கார்த்திக் என தகவல். நண்பர்கள் என தகவல். தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேச அதிமுக மற்றும் நாடார் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் செல்வன் ஆகியோரும் உதவியுள்ளனர்” என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை தீவிர ஆலோசனை..!
இதனிடையே கைதானவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள், கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அசோக் குமாரை கைது செய்வதா அல்லது செந்தில் பாலாஜியை கைது செய்வதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டுள்ளனவாம். அதேநேரம், கரூரில் உள்ள வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதார் அசோக் குமார் ஆகியோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருவரும் தமிழ்நாட்டில் தான் உள்ளார்களா? அல்லது அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனராம்.