சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் சடலமாக மீட்கபட்ட 10 வயது சிறுமி கொலை வழக்கில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 10 வயது மகள், கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அன்றிரவே சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
குளக்கரையில் சடலமாக மீட்பு
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு, நேற்று காலையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. சிறுமியின் வீட்டின் அருகே இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாகக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ (ESI) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
சிறுமியின் மாயம் மற்றும் கொலை குறித்துப் போலீசார் கண்ணம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தில் அச்சிறுமி பயணம் செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நேற்று பிற்பகலில் கார்த்தியைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஏற்கனவே அறிமுகமான அந்தச் சிறுமிக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று இக்கொடூர செயலில் ஈடுபட்டதை அவன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோகன்ராஜ் என்பவருக்கு இந்த விவகாரம் தெரிந்தும் வெளியில் சொல்லாமல் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
குற்றவாளிக்குக் கால் முறிவு
இச்சம்பவம் தொடர்பாகக் கார்த்தி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான கார்த்திக்குக் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.