சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல்

283 0

சென்னை:

மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) கரையை கடக்கக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல், வடதமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலைக் கொண்டு, அதன்பின்னர் தெற்கு ஆந்திர பகுதிகளையொட்டி கரையை கடக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் மிச்சாங் புயல் நிலைக்கொண்டு இருந்தது.

அப்போது இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. புயலைச் சுற்றி அடர்ந்த மேகக் கூட்டங்கள் அதிகளவுடன் நகர்ந்து வந்ததால், அதனுடைய நகர்வு வேகம் முன்பை விட மிகவும் குறைந்தது. இதனால் முதலில் புயலாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டது.சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல் | Cyclone michigan moved  away from Chennai

மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளை நேற்று முன்தினம் அதிகாலை நெருங்கியது. அந்த நேரத்தில் இருந்து அதிகனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. மிச்சாங் புயலின் மையப் பகுதி என்று கூறப்படும் கண் பகுதியை சுற்றி இருக்கும், மழை, காற்று மேகங்களும், அதனைத் தொடர்ந்து வந்த மழை மேகங்களும் சென்னை மீது படரத்தொடங்கியது.

சென்னையை ஒட்டிய பகுதிகளில்தான் புயலின் பாதை சற்று வளைந்து சென்றது. இதனால் அந்த நேரத்தில் புயலின் வேகம் மேலும் குறைந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் புயலுடன் மேகக்கூட்டங்கள் வெகு நேரங்கள் பயணித்தன. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை அதிகனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதிகனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செ.மீ.மழை பெய்திருந்தது. அதற்கடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியது.

அதி கனமழை, மிக கனமழை பெய்த இடங்கள் பெரும்பாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த இடங்களாகவே இருந்தன. நேற்று காலையும் சென்னையில் மழை தொடர்ந்தது. இடைவிடாமல் பெய்த மழையினால் சென்னை மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போனது.

அதிகனமழை ஒரு பக்கம் இருந்தாலும், தரைக்காற்றின் தாக்கமும் அதிகளவில் இருந்தது. அந்த வகையில் அதிகபட்சமாக நேற்று அதிகாலை 4.15 மணியளவில் மீனம்பாக்கத்தில் 88 கி.மீ. வேகத்திலும், அதற்கடுத்தபடியாக எண்ணூர் துறைமுகத்தில் 81 கி.மீ. வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் அதிகாலை 3.20 மணிக்கு 71 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. விளம்பர பேனர்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் தகர சீட்டில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்கள், கடைகளும் சூறாவளி காற்றினால் துவம்சமாகின.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் மழை கொட்டியதற்கு, மிச்சாங் புயலின் வெளிப்புற மேகக்கூட்டங்கள்தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளையொட்டியே கடந்து சென்றது. இதில் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூரில்தான் அதி கனமழை கொட்டி இருக்கிறது. பிற்பகலில் இந்த மாவட்டங்களில் மழையுடன், காற்றும் வீசியது. பின்னர் மாலையில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வடமேற்கு திசை காற்று, மேற்கு திசை காற்றாகவும், நடுப்பகுதியில் வடதிசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும், மேலடுக்கில் வடகிழக்கு திசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும் மாறியது.

இதனால் மிச்சாங் புயல், சென்னை பகுதிகளை கடந்து விலகிச் செல்ல தொடங்கியது. புயல் விலகிச் சென்றாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவு வரை மழை பெய்த வண்ணமே இருந்தது. அதனையடுத்து முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை குறையத் தொடங்கியது. அதன் பின்னர், சென்னையில் நள்ளிரவுக்கு பிறகு ஓரளவுக்கு மழை குறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மிச்சாங் புயல் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர்-காவாலி இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெற்கு ஆந்திர பகுதியையொட்டி நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெல்லூர்-காவாலி இடையே கரையை கடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



Related Post

Generated Image February 06 2026 10 48AM

அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

Posted by - February 6, 2026 0
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை…

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - April 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!

Posted by - July 14, 2025 0
அதிமுக கூட்டணி வலிமையானதாகவும், ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு 2026 அமைந்தால், அது கூட்டணி ஆட்சியாகதான் இருக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *