Suriya Karuppu Movie Release: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் இன்றைய சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு – சிறப்புக் காட்சிகள் ரத்து
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கள் இசையமைக்க, த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட காத்திருப்பு மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கருப்பு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும், தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனையும் அமோகமாக நடந்துள்ளது. இந்நிலையில், கருப்பு திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று காலை 9 மணிக்கு வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கருப்பு – தயாரிப்பாளர் சொல்வது என்ன?
கருப்பு திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு அதிகாலை 1.17 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவில், “சில தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறப்பு காட்சிகள் மட்டும் தான் ரத்தா? அல்லது படமா இன்று வெளியாகாதா? இன்னும் எத்தனை முறை படத்தின் வெளியீடு தாமதமாகும்? உண்மையான சூழலையும் காரணத்தையும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் சொல்லுங்கள் என தயாரிப்பாளரை நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கருப்பு – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்:
முன்னதாக நேற்று இரவு கருப்பு திரைப்பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில், “அன்பான ரசிகர்களே, தற்போதைய சூழ்நிலைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தடைகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு எப்பொழுதும் தடைகள் உண்டு, எப்படியோ கடவுள் அதையெல்லாம் கடந்து 32 மாதங்களுக்குப் பிறகு இங்கே இருக்கிறோம். இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். #Karuppu நாளைக்கு காலைல செமயா ரிலீஸ் ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்” என குறிப்பிட்டு இருந்தார். அப்போதே கருப்பு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என பல கேள்விகள் எழுந்தது.
தொடர் தாமதம் பிரச்னை என்ன?
கருப்பு திரைப்படத்திற்கான பணிகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்தாலும், நிதிச் சிக்கல் மற்றும் ஒடிடி உரிமை போன்ற பல காரணங்களால் வெளியீடு தாமதமாகி வந்தது. இதுபோக தயாரிப்பாளர் சுமார் 60 கோடி ரூபாய் கடனை தீர்க்க வேண்டி இருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த அனைத்து பிரச்னைகளையும் முடித்து தான், படத்தை இன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது வருமான பங்கீடு தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சுமூகமான முடிவு எட்டப்படாததால், கருப்பு திரைப்படத்தின் வெளியீடு கேள்விக்குறியாகியுள்ளது.