Tamilnadu Power Cut : தினமும் இரவில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றும் மேற்கு மாம்பலம், முகப்பேர், மடிப்பாக்கம் பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது உச்சத்தில் உள்ளது. காலை 6 மணிக்கே சூரியன் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடக்கும் நிலையில், மின் வெட்டு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் அம்பத்தூர், மடிப்பாக்கம்,மாம்பலம், முகப்பேர், பெரம்பூர், கொளத்தூர், நீலாங்கரை என பல இடங்களிலும் தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
சிஎம் வீடு உள்ள நீலாங்கரை, பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டு
அந்த வகையில் நேற்று இரவு மடிப்பாக்கம், மேடவாக்கம், மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களால் வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்தனர். மேலும் வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர்கள் அவதிக்குள்ளானர்கள். மறுநாள் வேலைக்குச் செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால்,முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லை தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அலுவலகம் முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த ற்றுவட்டார பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பாக திரண்டு சென்று முற்றுகையிட்டு,போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினந்தோறும் இரவு மின்வெட்டு ஏற்படுகிறது.குழந்தைகள் எப்படி தூங்கும்,உங்கள் பணியை சரியாக செய்யுங்கள் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. மின்சாரம் எப்போது வரும்,எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால்,இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த கால ஆட்சியில் கோடை காலத்தில் தேவைப்படும் கூடுதல் மின் தேவையை பொறுத்து அதிகளவு பணம் கொடுத்து வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
என்ன செய்கிறதுதவெகஅரசு.?
ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மின் வெட்டை சரிசெய்ய எந்த நடவடிக்கை எடுத்துள்ளளது என கேள்வியானது எழுந்துள்ளது. இதனிடையே மின்சாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இரவு நேரங்களில் திடீரென அதிகரிக்கும் மின்சாரத் தேவையால் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின் வழித்தடங்களில் ஏற்படும் கூடுதல் சுமை போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் மட்டுமே இந்தத் மின் வெட்டு ஏற்படுவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எதுவாக இருந்தாலும் தொடரும் மின்வெட்டால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் எப்போது மின் தடை எற்படுமோ என்ற அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது.