ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா? திமுக கேள்வி
தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக அக்கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக பத்திர பதிவுத்துறை தலைவர் அண்மையில் கூறும்போது, ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்’’ என்று கூறி இருந்தார்.
தவெக ஆட்சியில் முதல்வர் விஜய் தலைமையில் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊழல் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, முந்தையம்அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக திமுக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தி இருப்பதுபோல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
கணினி மயமாக்கிய கலைஞர்
பத்திரப் பதிவுத் துறையை கணினி மயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
18 சேவைகளை உள்ளடக்கிய செயல் திட்டம்
இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?’’ என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.