தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், சபாநாயகர் பதவியை தவெக தங்கள் வசம் தக்கவைக்குமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் இன்று ஆட்சியமைத்துள்ளது.
இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு:
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு தற்போது முதல் சவாலாக அமைந்திருப்பது சபாநாயகர் பதவி ஆகும். தற்போது தவெக ஆட்சியின் இடைக்கால சபாநாயகராக கருப்பையா பொறுப்பேற்றுள்ளார்.
சபாநாயகர் பதவி யாருக்கு?
சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் தவெக சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தும் சூழலில், எதிர்க்கட்சியான திமுக-வும் வேட்பாளரை நிறுத்துவார்கள் என்று கருதப்படுகிறது. தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்தாலும், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இன்னும் திமுக கூட்டணியிலே தொடர்கின்றனர்.
இதனால், ஒருவேளை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்போது அவர்கள் திமுக முன்மொழியும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தால் தமிழக வெற்றிக் கழகம் தங்களது சபாநாயகர் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். அப்படி நிகழாமல் அவர்களும் தவெக தரப்பு சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால் தவெக-வைச் சேர்ந்தவரே சபாநாயகராக பொறுப்பேற்பார்.
தேடல் தீவிரம்:
தற்போது இடைக்கால சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகராக யாரை நியமிக்கலாம்? என்ற தேடலில் தவெக இறங்கியுள்ளது. கட்சியில் பெரும்பாலும் புதிய உறுப்பினர்கள் என்பதால் நல்ல திறமைவாய்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் திறம்பட கையாளும் அனுபவம் கொண்டவரையே சபாநாயகராக நியமிக்க தவெக முடிவு செய்துள்ளது.
சபாநாயகர் விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் தவெக ஆட்சியில் நிரந்தர சபாநாயகர் யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய வரும்.
அதிமுக நிலைப்பாடு என்ன?
சபாநாயகர் தேர்வு விவகாரத்தில் அதிமுக-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஒருவேளை திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டால் அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவை தவெக பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனிப்பெரும்பான்மை இல்லாமல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக-வின் அமைச்சர்களில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள் என்பதால் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? அவர்களது நிர்வாகத் திறன் எப்படி இருக்கப்போகிறது? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.