Vijay CM Oath Ceremony: தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் இந்த நாள் தேய்பிறை அஷ்டமி தினமாகும். இந்த நாள் ஆன்மிகத்தின்படி என்ன நடக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பதவியேற்கவுள்ளார். இன்று நாள் எப்படி இருக்கிறது என்பது பற்றிப் பார்க்கலாம்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டிய நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்டார். தீவிர ஆலோசனைக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது. இந்த 4 கட்சிக்கும் தலா 2 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதேசமயம் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் ஆதரவு கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய் 120 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனையடுத்து இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் விஜயை சட்ட விதிகளின்படி முதலமைச்சராக நியமிப்பதாக அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் முடிந்துள்ளது.
விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. தவெக தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கிட்டதட்ட 4 நாட்கள் போராட்டத்திற்குப் பின் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார்.
இந்த நிலையில் விஜய் பதவியேற்கும் இந்த நாள் எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம். அதன்படி மே 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாள் சாஸ்திரப்படி தேய்பிறை அஷ்டமி தினமாகும். சித்திரை மாதம் 27ம் தேதியான இன்று அக்னி நட்சத்திரத்தின் 7ம் நாளாகும். முதலில் விஜய் பதவியேற்பு விழா மதியம் 3.15 மணிக்கு நடைபெறுவதாக சொல்லப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை 10 மணிக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இன்றைய நாளில் இராகு காலம், குளிகை, எமகண்டம் போன்றவை மதியம் 12 மணிக்கு மேல் தான் தொடங்கிறது. நல்ல நேரம் காலை 7.30 முதல் 8.30 வரையும், கௌரி நல்ல நேரம் 10.30 – 11.30 மணி வரையும் உள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரமும் நல்ல நேரமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் விஜய் நேரம் நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய நாள் தேய்பிறை அஷ்டமி திதியாக உள்ளது. பொதுவாக அஷ்டமியில் எந்தவித நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். ஆனால் தேய்பிறை அஷ்டமி நாளில் இறைவழிபாடு செய்து நாம் செய்ய வேண்டிய காரியத்தை தொடங்கினால் வெற்றி கிட்டும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்றைய நாள் எதிரிகள் பயம் மற்றும் நம் முன் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும் ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இதனால் தடைகள் அனைத்தையும் விஜய் தகர்த்து நல்லாட்சி செய்வார் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.