திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என வைரமுத்து பேசியுள்ளார்.
திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்து வருத்தமாக பேசினார். அவர் பேசுகையில், “இந்த நேரத்தில் என்னுடைய ஆதங்கம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திமுக தேர்தலில் தோற்கலாம். ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது. நிலா தேயலாம், வானம் தேய்ந்து விடக்கூடாது. இதுதான் என்னுடைய ஆதங்கம்” என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு நன்மை செய்தால், இரவு பகலாக உழைத்தால், தொண்டு செய்தால், கொளத்தூர் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியா அல்லது சிங்கப்பூரின் ஒரு பகுதியாக என கேட்கும் அளவுக்கு உயர்த்தியவர் மு.க.ஸ்டாலின்.
அவர் பேசிய பேச்சு என் இதயத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை சொல்லாதீர்கள். தோல்வியின் முழு பொறுப்பையும் நான் ஒருவன் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன் என சொன்னார். இந்த தோல்விக்குப் பின் நாம் இயக்கத்தை செம்மைப்படுத்த வேண்டும். என்ன நிகழ்ந்தது என்பதை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். நான் எளியவன், அரசியல் அறிவு இல்லாதவன், உங்களோடு பயணிக்க வாய்ப்பு அற்றவன், தகுதி கூட இல்லாதவன் என சொல்லலாம்.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் சொல்லுங்கள். இது நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய காலமாகும்.
மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார் என்றால் தமிழர்களின் நன்றி உணர்வின் மீது நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறது. அந்த தோல்வியெல்லாம் ஒரு தோல்வியல்ல. மே 4ம் தேதி மட்டும் தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நான் ஸ்டாலினுக்கு வருந்துவதை விட அந்த தொகுதி மக்களுக்காக அதிகம் வருந்துகிறேன்” என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியை தழுவியது மிகப்பெரிய அளவில் தேர்தல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்வியில் இருந்து ஒரு மாத காலமாகியும் இன்னும் திமுகவினரால் மீள முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.