தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் திமுக, அதிமுக ஆகிய கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, இதுவரை அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சியை புரிந்து வந்த தமிழகத்தில், 59 ஆண்டு கால வருட திராவிட ஆட்சிகளுக்கு தவெக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி 108 தொகுதிகளை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்த போதும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் உதவியோடு ஆட்சி அமைத்தார் விஜய்,
முதல்வர் பதவியேற்பு விழா
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த விழாவில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக, திமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரம் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக அரசு பதிவியேற்பு விழாவில் எதிர்கட்சியாக இருந்த திமுக சார்பாக ஸ்டாலின் கலந்து கொண்டார். இதேபோல 2021ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற போது அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகராக இருந்த தனபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
புறக்கணித்த திமுக, அதிமுக
ஆனால் இன்று தவெக அரசு பதவியேற்ற போது திமுக மற்றும் அதிமுக சார்பாக எந்த நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவினருக்கு தவெக சார்பாக அழைப்பு விடுக்கவில்லையா.? அல்லது வேண்டும் என்றே திமுக மற்றும் அதிமுகவினர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்களா.? என கேள்வி எழுந்துள்ளது.