“இவரெல்லாம் ஜெயிக்க வாய்ப்பில்லை” என்று வியூகப் புலிகளால் ஒதுக்கப்பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகுதிகளை வென்று ஆட்சியையும் தக்கவைத்து விட்டார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட வெற்றி அலையானது தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
விஜய்யோடு எப்போது கைகோக்கலாம் என சமயம் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியானதுமே முதல் ஆளாக ஓடிப்போய் தவெக-வுக்கு ஆதரவளித்தது. இதனால், திமுக கூட்டணி மட்டுமல்லாது இண்டியா கூட்டணியே கலகலக்க ஆரம்பித்தது. காங்கிரஸும் திமுக-வும் பரஸ்பரம் கண்டனக் கணைகளை வீசிக் கொண்டன.
இதனையடுத்து, திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக. இது தொடர்பாக அந்தக் கட்சிகளுக்குள்ளும் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. இருப்பினும் கொல்லைப்புற வழியாக பாஜக உள்ளே வருவதை தவிர்ப்பதற்காக தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக அறிவித்த கம்யூனிஸ்ட்கள், திமுக கூட்டணியில் தாங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும் அறிவித்தன.