அண்ணாமலை ஒரு திட்டத்தோடு டெல்லி சென்ற நிலையில், அங்கு அவருடைய முடிவை மாற்றும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
பாஜகவிலிருந்து விலகி, புதிய கட்சி தொடங்குவது குறித்து விளக்கமளிக்கவே அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெயிானது. ஆனால், அங்கு சென்று, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினையும், மூத்த தலைவர் அமித் ஷாவையும் சந்தித்த பிறகு, அண்ணாலையின் முடிவை மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு ஒரு விஷயம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
புறக்கணித்த பாஜக தலைமை – அதிருப்தி அடைந்த அண்ணாமலை
ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து, தனது துணிச்சலான பேச்சுக்களால் இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமடைந்தார். இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து அரசியல் ஆர்வத்தை தூண்டிய அவர், பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
தனது அதிரடி செயல்பாடுகளுக்கு பெயர் போன அண்ணாமலையின் பின்னால் ஒரு கூட்டம் திரண்டது. அதனால் கிடைத்த பலனாக, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக 11 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. இதனால், அண்ணாமலையின் செல்வாக்கு உயர்ந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக, அதிமுகவின், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நிர்பந்தத்தினால், அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்றி, நயினார் நாகேந்திரனை நியமித்தது பாஜக தலைமை.
மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த அண்ணாமலைக்கு, அவர் கேட்ட கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு தொகுதிகளில் ஒன்றையும் வழங்காமல் அவரை புறக்கணித்தது பாஜக தலைமை. இதனால், அதிருப்தியில் வேறு தொகுதியில் தன்னால் போட்டியிட முடியாது எனக் கூறி விலகிக்கொண்டார் அண்ணாமலை.
2 தொகுதிகளக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாலும், அண்ணாமலை பிரசாரத்திலும் சரிவர ஈடுபடாமல் இருந்த நிலையில், அவரை சமாதானப்படுத்தியது பாஜக மேலிடம். ஆனாலும், அவர் பாஜக தலைமை மீது அதிருப்தியிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரை தனி கட்சி தொடங்குமாறு அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், சமீபத்தில் அவர் புதிய கட்சியை தொடங்கப் போவதாக தகவல் தீயாய் பரவியது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற நிலையில், வாக்கு வங்கியும் 2 சதவீதமாக சரியவே, அதனை விமர்சித்தார் அண்ணாமலை.
டெல்லி பயணம் – 2 நாட்களில் பதில் என பேட்டி
இந்த சூழலில், பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை அண்ணாமலை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து, விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல், 2 நாட்களில் எல்லாவற்றையும் சொல்வதாக கூறிவிட்டுச் சென்றார் அண்ணாமலை.
டெல்லியில் நடந்தது என்ன.?
இதைத் தொடர்ந்து, இன்று டெல்லியில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசிய அவர், தான் கட்சியிலிருந்து விலகுவது குறித்து விளக்கமளித்ததாக கூறப்பட்டது.
அதன் பின்னர், பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் அண்ணாமலை. தான் கட்சியிலிருந்து சுமூகமான முறையில் விலக விரும்புவதாகவும், இனி தனது விருப்பப்படி இருக்கப் போவதாகவும் அண்ணாமலை பாஜக தலைவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அண்ணாமலையை கட்சியில் இருக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தேசிய அளவில் ஒரு பெரிய பொறுப்பை வழங்க ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை, டெல்லியை விட்டு செல்ல வேண்டாம் என பாஜக தலைமை அவரிடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அடுத்து என்ன என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை தனது விருப்பப்படி புதிய கட்சியை தொடங்குவாரா.? அல்லது ‘U‘ டர்ன் அடித்து பாஜகவிலேயே நீடிப்பாரா.? பொறுத்திருந்து பார்ப்போம்.