CM Vijay Speech: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தான் அணியும் கோட் சூட் குறித்து விளக்கமளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவர், இந்த தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், சட்ட விதிகள் காரணமாக, திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று முதல்வர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், தனது கோட் சூட்டிற்கும் விளக்கமளித்தார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“திருச்சி கிழக்கு மக்கள் என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்“
தேர்தலில் வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குறிப்பாக திருச்சி கிழக்கு மக்களுக்கு ஸ்பெஷல் வணக்கம் மற்றும் ஸ்பெஷல் நன்றி என தெரிவித்தார். தன்னை தற்போது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ தான் என்று கூறுவார்கள், ஆனால், அது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்காகத் தான் என்றும், ஆனால் தனக்கு, தமிழ்நாட்டிற்கு திருச்சி எப்படி இதயம் போன்றதோ, அதே போல், தன்னுடைய இதயத்திற்கு திருச்சி கிழக்கு மக்கள் மிக மிக மிக நெருக்கமானவர்கள், அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார்.
ஆட்சிக்கு வந்த சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறியவர்களால், 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை, ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே தொடங்கிவிட்டார்கள் என்று அவர் விமர்சித்தார்.
“இன்னும் கொஞ்சம் ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்“
இத்தனை வருடங்களாக மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜய்யை, உங்கள் அண்ணனை, உங்கள் தம்பியை முதலமைச்சராக அல்ல, முதல் சேவகனாக ஆக்கியிருக்கீறீர்கள் என்றும் அதற்காக ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் விஜய் கூறினார்.
அதோடு, எம்ஜிஆர் அவர்கள் கூட அவரது முதல் தேர்தலில் இந்த அளவிற்கு வாக்கு சதவீதத்தை வாங்கவில்லை என்று சிலர் கூறியதாகவும், தான் எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிடவில்லை என்றும், எம்ஜிஆர் எம்ஜிஆர் தான் என்றும், தான், பெரியார், அண்ணா, எம்ஜிஆர வழியில் அன்பாக உழைக்க வந்த உங்கள் விஜய் தான் என்று கூறினார்.
மேலும், 1977-ல் நீங்கள் போடாத வாக்குகளை இப்போது 2026-ல் நீங்கள் போட்டுள்ளீர்கள் என்று கூறிய முதலமைச்சர் விஜய், “என்ன ஒண்ணு, இன்னும் கொஞ்சம் அதிகமா ஆதரிச்சிருந்தீங்கன்னா, கொஞ்சம் நல்லா இருந்துருக்கும்“ என்று சிரித்துக் கொண்டே கூறினார். இருந்தாலும் பரவாயில்லை, எதிர்வரும் தேர்தல்களில் உங்கள் முழு ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோட் சூட் குறித்து விளக்கம்
தான் தற்போது அணியும் கோட் சூட் குறித்து சிலர் கிண்டலடிப்பதாக குறிப்பிட்ட விஜய், “ஏன் நாம எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா“ என கேள்வி எழுப்பினார். அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்க சக்திகளும் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா என கேட்ட அவர், அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்றும், தான் கலர் கலராக கோட் சூட் அணியவில்லை, இரண்டே கலர், நம் எல்லோருடைய மனதும் போலவே கருப்பு வெள்ளை என கூறினார்.
“எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இந்த விஜய் இருப்பான்“ என்று காண்பிக்கவே தான் அந்த கலரை அணிவதாகவும், அதில், அந்த கருப்பு யாரை குறிக்கும், எதை குறிக்கும் என்பது உங்களுக்கே தெரியும் என்று முதலமைச்சர் விஜய் விளக்கமளித்தார்.