CV Shanmugam vs EPS : அமைச்சர் பதவி கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்தை நம்பி வந்த அதிமுக ஒரு பிரிவு எம்எல்ஏக்களுக்கு தவெக கை விரித்துள்ளது. தற்போதைக்கு அமைச்சரவையில் இடம் வழங்க முதலமைச்சர் விஜய்க்கு விருப்பமில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 53 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அதே நேரம் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்களை கொண்ட ஒரு அணி தவெக ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் என 30 மாவட்ட செயலாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்தாக தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யவும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி டீமுக்கு அதிர்ச்சி
இந்த நிலையில் தவெக ஆட்சியில் குறைந்தது 6 முதல் 7 அமைச்சரவை இடங்களை பெற்றுவிடலாம் என காத்திருந்த எஸ்.பி.வேலுமணி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் அதிமுகவை இணைத்தால் ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டிருக்கும் என கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரித்துள்ளது. இதனால் முதலமைச்சர் விஜய், அதிமுக அதிருப்தி அணியை அமைச்சரவையில் இணைக்க வேண்டாம் என முடி்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை
இதற்கு மாற்றாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை அமைச்சரவையில் பங்கேற்குமாறு தவெக மூத்த நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிம் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி அமையும் வகையில் தவெகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவை அளித்துள்ளோம், இப்போது ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள, முஸ்லிம் லீக் மீண்டும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என அழைத்துள்ளார். ஏற்கனவே எங்கள் கருத்தை தெரிவித்து விட்டோம். இருந்த போதும் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம். விரைவில் முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.
இந்த நிலையலில் அதிமுகவில் இருந்து ஒரு பிரிவை அமைச்சரவையில் இடம் கொடுத்தால் எங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என தெரிவித்து இருந்தோம். அப்படி எந்த முயற்சியும் இல்லையென தகவல் வந்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவினருக்கு அமைச்சரவையில் இடம் இல்லையென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தவெகவில் இருந்த தகவல் வந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நட்டாற்றில் தவிக்கும் அதிமுக சி.வி.சண்முகம் டீம்
எனவே அமைச்சவையில் இடம் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை நம்பி வந்த எம்எல்ஏக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது தவெக. அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணி தெரிவித்திருப்பதால் மீண்டும் அதிமுகவில் இணைந்த பழைய நிலைக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகிறது. எனவே தற்போதைய சூழலில் நட்டாற்றில் அதிமுக அதிருப்தி அணி தவித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.