TVK Govt: திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு அமைச்சர் இலாகாவிலும் டெண்டர் வழங்குவதில் நடைபெற்ற, கமிஷன் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த தரவுகளை சேகரிக்க தவெக அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளதாம்.
TVK Govt: திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள் குறித்த தரவுகளை சேகரித்து கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் தவெக அரசு திட்டமிட்டுள்ளதாம்.
தமிழ்நாட்டின் அமைச்சரவை இலாகாக்கள்..!
தமிழ்நாட்டில் தொழில், ஊரக வளர்ச்சி, நீர்வளம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் மின்சாரம் என மொத்தம் 41 துறைகள் உள்ளன. இவற்றில் மானியங்களை வழங்குவது, வளர்ச்சி, மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மாநில பட்ஜெட் மூலமாக ஒதுக்கப்படுகிறது. அதன் மூலமான பெரும்பாலான பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக செய்யப்படுகிறது. இதற்காக தகுதி அடிப்படையில் 5 தரங்களில் ஒப்பந்ததாரர்களை அங்கீகரித்து அரசு சான்றிதழ்களை வழங்குகிறது. அவர்கள் மூலமாக தான் பல ஊழல் மற்றும் லஞ்ச முறைகேடுகள் அரசில் நிகழ்வுதாக பல ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
டெண்டர்கள் மூலம் முறைகேடு – 40% வரை கமிஷன்?
லட்சங்களில் தொடங்கி பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை ஒப்பந்ததார்கள் மேற்கொள்கின்றனர். ஆனால், அந்த ஒப்பந்தங்களை வழங்க கடந்த கால ஆட்சியை சேர்ந்த அமைச்சர்கள் திட்டத்தின் மதிப்பில் குறிப்பிட்ட சதவிகித்தை தங்களுக்கு லஞ்சமாக வழங்க நெருக்கடி தந்துள்ளனர். மேலும் சிலர் தங்களது பினாமிகளையே ஒப்பந்ததார்களாக பதிவு செய்து பணிகளை மேற்கொண்டும், கமிஷன் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பணிகளே தொடங்காவிட்டாலும் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு பணி நடைபெற்று வருவதாக அனுமதி வழங்கிய கூத்துகளும் அரங்கேறி உள்ளனவாம். ஒவ்வொரு பணிக்கும் 20 முதல் 40 சதவிகிதம் வரை கமிஷன் கறாராக கைமாறியதாகவும், அரசு அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்ததகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கமிஷன் கலாசாரத்தை முறியடிக்க முதலமைச்சர் விஜய் தீவிரமான முயன்று வருகிறாராம்.
சிறப்புக் குழுக்களை போட்ட சிஎம் விஜய்
தவெக தலைமையிலான அமைச்சரவையில் ஈடுபட்டு இருப்பவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாராம். டெண்டர் விவகாரங்களில் அமைச்சர்கள் யாரும் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளாராம். அதோடு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையி, முன்னாள் அமைச்சர்களுக்கும், அரசுக்கும் பதிலடி தரும் வகையில் பல்வேறு புள்ளி விவரங்களை சேகரிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். அதன்படி, திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் நடந்த டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.
முதலமைச்சரிடம் அறிக்கை..
துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை ஒருங்கிணைத்து இந்த சிறப்பு ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம். துறைகளின் தலைமை செயலர்கள் தலைமையில், இந்த குழு ஆலோசனையும் நடத்தியுள்ளதாம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு துறைகளில் வழங்கப்பட்ட டெண்டர்கள், நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கமிஷன் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனவாம். இதுதொடர்பான விரிவான அறிக்கைகள் அந்தந்த துறை செயலாளர்கள் வாயிலாக முதலமைச்சர் விஜயிடம் விரைவிலேயே சமர்பிக்கப்பட உள்ளனவாம்.
திமுகவிற்கு பதிலடி தர தீவிரம்:
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, சட்டமன்றத்தில் இந்த விவகாரங்களை அம்பலப்படுத்தி திமுகவிற்கு பதிலடி தரவும் வாய்ப்புள்ளதாம். ஒருவேளை லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால், அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் மற்ற பணிகளை பார்த்துக்கொள்ளும் எனவும் தவெக தரப்பு கருதுகிறதாம்.