விஜயை காண நேற்றிரவு முதல் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு படையெடுத்தனர். புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிகாலை திருப்பலி நடக்கும்போது விஜய் வராமல் இருந்ததால் குழப்பமடைந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேளாங்கணிக்கு இன்று வருகை தர இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.10% ஆக உயர்ந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஆகியவை வாக்கு சதவிகிதம் உயர காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், சசிகலா- ராமதாஸ் கூட்டணி, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி என பலமுனை போட்டி நிலவியது.
இதில் முதல்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 231 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். சேலம் எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்பாளர் செய்த சதியால் கடைசியில் சுயேட்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்கு விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.
அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த கட்சியின் வாக்கைப் பிரிக்கப் போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளிலும் தவெக பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.
விஜயின் திடீர்ஆன்மிகபயணம்
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ஒன்றரை மாத தேர்தல் பரப்புரை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கொடைக்கானலுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு துபாய்க்கும் சென்று ஓய்வு எடுத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். தொடர்ந்து ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் இன்று அதிகாலை நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நாகூர் தர்கா செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது.
விடிய விடிய குவிந்த மக்கள் ஏமாற்றம்
இந்த நிலையில் விஜயை காண நேற்றிரவு முதல் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு படையெடுத்தனர். புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிகாலை திருப்பலி நடக்கும்போது விஜய் வராமல் இருந்ததால் அங்கு வருகை தந்த இளைஞர்கள், பெண்கள் என பலரும் TVK என கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழிபாட்டுக்கு இடையூறின்றி அமைதி காக்க பேராலயம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் பயணம் ரத்து செய்யப்பட்டால் அனைவரும் ஏமாற்றமடைந்தனர். பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு விஜய் செல்லவில்லை என சொல்லப்படுகிறது.