காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

119 0

சிவகங்கையில், அஜித்குமார் என்ற காவலாளி, காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில், காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, இச்சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த கேள்விகள் என்னென்ன.? பார்க்கலாம்.

சிவகங்கை லாக்-அப் மரணம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரில் வைத்திருந்த தன்னுடைய தங்க நகைகள் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், நிகிதாவிற்கு உதவி புரிந்த கோயில் பாதுகாவலர் அஜித்குமார் என்பவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமையே அழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர்.

மீண்டும் சனிக்கிழமையன்று காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், விசாரணையில் இருந்தபோது திடீரென உயிரிழந்தார். இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், இந்த லாக்-அப் மரணம் தொடர்பாக திருப்புவனம் தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

வலுத்துவரும் கண்டனங்கள் 

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருப்பதற்கும், உயிரிழந்த அஜித்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தின், தனது எக்ஸ் தள பதிவின் வாயிலாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது பதிவு குறித்து தற்போது பார்க்கலாம்.

நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் என்னென்ன.?

சிவகங்கை லாக்-அப் மரணம் தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவரும், எம்எல்ஏ மற்றும் பாஜக சட்டமன்ற தலைவருமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்,

“அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,

பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் “காவல்துறை அமைச்சர்” மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்“ என கேட்டு, பின்வரும் கேள்விகளை எழுப்பிள்ளார்.

1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து “உண்மையை” வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?

6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும்  திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட அறிவாலய அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?

9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்!

இவ்வாறு, தனது பதிவின் மூலம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Related Post

“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

Posted by - November 22, 2025 0
கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு…

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

Posted by - November 10, 2023 0
சென்னை: அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய். அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி,…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *