TVK leader Vijay letter to the governor : தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்
ஆட்சியை இழந்த திமுக- கெத்து காட்டிய தவெக
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திமுக தோல்வியை தழுவியது. யாரும் எதிர்பாராத வகையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இதே போல திமுக அமைச்சர்கள் 16 பேர் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாக முன்னிலையில் உள்ளது. அடுத்தாக திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
பெரும்பான்மை கிடைக்காத தவெக
இருந்த போதும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எந்த கட்சியும் எட்டாத காரணத்தால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மையோடு யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க தவெக திட்டமிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாமகவின் ஆதரவையும் பெற தவெக காய் நகர்த்தி வருகிறது.
ஆளுநருக்கு விஜய் கடிதம்
இந்த நிலையில் தமிழகத்தின் ஆளுநர் தற்போது கேரளாவில் உள்ளார். இன்று இரவு சென்னை வரவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி தவெகவை ஆட்சி அமைக்க அழைக்கும் படியும், இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.